siddhas

Wednesday 29 April 2015

80 வகை வாத நோய்களும். அவற்றை தீர்க்கும் மூலிகைகளும்.


மனிதனின் உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும்  இருக்க வேண்டும். ஆனால்?  சரியான அளவில் இருக்க வேண்டும். நமது உடலிலே நீரும்  இருக்கிறது,  நெருப்பும் இருக்கிறது. இனிப்பும்  இருக்கிறது, கசப்பும் இருக்கிறது. ஆனால் எல்லாம் சரியான அளவில் இருக்க வேண்டும். எதுவுமே கூடினாலும், குறைந்தாலும் பிரச்சனையே. வாதம் அதிகரித்தால் உடல் வலி. பித்தம் அதிகரித்தால், வாந்தி, மயக்கம், தூக்கமின்மை போன்ற நோய்கள். கபம் அதிகரித்தால் அடிக்கடி  சளி தொல்லை வரும்.

 ஆயுர்வேத மருத்துவர் மொஹமத் அலி அவர்கள்.


காலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்தில் வாதம் வேறு வந்து வாய்த்துவிட்டதே என்ற வேதனையின் பிரதிபலிப்பே இந்தப் பழமொழியாகும்.

உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட் டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது. யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல்.

வாதநோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. உதாரணமாக மூட்டுகளைத் தாக்கினால் மூட்டுவாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகம் கோணிக் கொண்டால் முக வாதம் என்றும், சர்வ அங்கங்களையும் தாக்கினால் சர்வாங்க வாதம் என்றும் பெயர்களைப் பெறுகிறது. இவ்வாறாக 80 வகை வாதங்களில் மனிதனை அதிகமாகத் தாக்குவது முடக்குவாதம், பக்கவாதம் எனும் இருவகை வாத நோய்களாகும். ஏனெனில் வாத நோய்களிலேயே மூட்டுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி அவனைச் செயலற்றவனாக்கி விடுவதே முடக்குவாதம்.


நரம்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகளை உணர்விழக்கச் செய்து மனிதனைச் செயலற்றவனாக்கி விடுகிறது பக்கவாதம்.


இந்த இருவித நோய்களுமே மனிதனை அணுவணுவாகச் சித்திரவதை செய்யும் நோய்களாகும்.

முடக்குவாத நோயும் நிவாரணமும்.

முடக்குவாதம் என்பது உஷ்ணம் மிகுதியாலோ கிருமித் தொற்றுகளாலோ உடலில் பிரிக்கப்பட வேண்டிய நீர். உடல் அங்கங்களின் மூட்டுகளில் தங்கி இணைப்புத் தசைகளை வீங்கச் செய்து மிகுந்த வலி தரும். தொடர்ந்து காய்ச்சல் அதனால் உடலை அசைக்க முடியாத தன்மையே முடக்கு வாதம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி வைப்பதே முடக்கு வாதம்.

முடக்குவாத வியாதியின் ஆரம்பத்தில் சில சமயம் தொண்டை பாதிக்கப்படுகிறது. பின்பு எலும்பு சந்துகள் சிவந்து வீங்கி வலியுண்டாகிப் படிப்படியாக பெரிய மற்றும் சிறிய மூட்டுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால் காய்ச்சல், வாந்தி, மயக்கம், உடம்புப் பெருக்கம் உண்டாகும். உட்கார்ந்தால் எழ முடியாது. அசைந்தால் உயிர் போவது போல் வலிக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது. இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் நோய் வாய்ப்படும். இதனால் இதய வால்வுகளிலும், உட்பகுதிகளிலும் அழற்சி உண்டாகும்.

முடக்குவாதம்.  நரம்புத் தளர்ச்சி, மனச் சஞ்சலம் ஆகியவைகளால் கூட வரவாய்ப்புள்ளது.

முடக்கு வாத நோய்க்கு  தீர்வு.

கொடி வேலி, மிளகரணை, நொச்சி இவைகளின் வேர்ப்பட்டையைக் சமமாக எடுத்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு  சிறிதளவு அளவு காலை, மாலை நீரில் கலந்து சாப்பிட்டுவர முடக்குவாதம் விலகும். இதை பச்சை தண்ணீரில் தான் கலக்க வேண்டும். வெந்நீர் உபயோகிக்க கூடாது.



100 கிராம் ஆமணக்குப் பருப்பை வெண்ணெய் போலரைத்துச் சிறிது, சிறிதாக 100 கிராம் நெய் விட்டுச் சிவக்க வதக்கி அதில் 600 மில்லி பால்விட்டுக் காய்ச்சி குழம்பு பதமானதும் 100 கிராம் சுக்குத் தூளைப் பொடித்துத் தூவிக் கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 5 கிராம் அளவு காலை, மாலை உண்டு வர முடக்கு வாதம், அதனால் ஏற்பட்ட இடுப்பு பிடிப்பு வலி  குணமாகும்.

பரங்கிப்பட்டை, கொடி வேலி வேர்ப்பட்டை சங்கன் வேர்ப்பட்டை, அமுக்கிலான் கிழங்கு ஆகிய நான்கிலும் வகைக்கு 100 கிராம் எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகள் வகைக்கு 15 கிராம் வீதம் சேர்த்துச் சூரணித்து வைத்துக்கொள்ளவும்.   கடுமையான முடக்கு வாதமாக இருந்தால் மகாவில் வாதி லேகியத்தை முறைப்படி உண்ண நோய் விலகும்.


 பக்கவாத நோய்க்கு தீர்வு

பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடது புறமும் தாக்கினால் எளிதில் தீராது. அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படுவதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்க வாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.



பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய் எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும்.
பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்கவேண்டும்.

அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2  ஸ்பூன்  வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


முள் சங்கின் இலை, அதன் விதை, அதன் பட்டை இம்மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலை, மாலை, சாப்பிட்டு, சுடுநீர் அருந்தி வர, பாரிசவாதம் அதனால் கை கால்கள் உணர்வற்றுப்போன நிலை மாறும்.

மேலும் சித்திர மூலப்பட்டை, மாவிலிங்கப் பட்டை, கொன்றைப் பட்டை, முருங்கைப்பட்டை., சங்கன்பட்டை, வேப்பம் பட்டை, வெள்ளறுக்கு, சுக்கு, மிளகு,  பஞ்சலவணம் என்று சொல்லப் படுகின்ற இந்துப்பு, வளையலுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, கரியுப்பு முதலியவைகளைச் சமமாக எடுத்து இடித்துச் சூரணமாகச் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர, பக்கவாதம் குணமடையும்.


இவையன்றிப் பக்கவாத நோய்க்குச் சண்ட மாருத செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம், அயவீரச் செந்தூரம், கெந்தி மெழுகு, நந்தி மெழுகு, மகாவீர மெழுகு, வாதராட்சதன் போன்ற உயரிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவைகளைக் கை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும். பக்கவாத நோயில் உள் மருந்துகளுடன் வெளிப்பூச்சுத் தைலங்களும், மற்றும் ஒத்தடம் போடுதல் போன்ற சிகிச்சைகளும் மிகவும் அவசியம். காரணம் உணர்விழந்த பகுதிகளைத் தேய்த்துச் சூடு உண்டாக்குவதன் மூலம் ரத்த ஓட்டம் உண்டாகி உணர்வு திரும்ப வாய்ப்புள்ளது.


அவ்வகையில் பச்சைச் சித்திர மூலவேர் 150 கிராம், ஊமத்தன் இலைச்சாறு 1 லிட்டர், ஓமம் 50 கிராம், நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கற்பூரம் 25 கிராம் இவைகளில் முதல் சொன்ன சித்திர நூல் வேலை சோற்றுக் கற்றாழையின் சாறு விட்டு நன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மீதமுள்ள ஊமத்தை இலைச்சாறு, நல்லெண்ணெய் இவைகளை நன்றாகக் கலந்து வண்டல் மெழுகு பதமாகத் தங்கும்போது தேக்கி வைத்துக் கொண்டு பக்கவாத நோயில் பாதிக்கப்பட்ட இடத்தின்மீது தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். காலை, மாலை இப்படிச் செய்தால் போதும்.


இது தவிர பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் கடையில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.
பக்கவாத நோயினால் சில நேரம் நாக்கு பாதிக்கப்பட்டுத் துவண்டுவிடும். அதற்கு அண்டத் தைலம் எனும் மருந்து அற்புதமாகப் பயன் தருகிறது.


மேற்பூச்சித் தைலங்களைப் பூசி மசாஜ் செய்த பின் கழற்சிக் கொழுந்து, வாதநாராயணன் உத்தாமணி இலை, முடக்கற்றான் இலை, நொச்சி இலை, தழுதாலை இலை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ஆமணக்கு எண்ணெயில் போட்டுச் சிறு மூட்டைகளாகக் கட்டிப் பாதிக்கப்பட்ட  இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.


பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிகளுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.
பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம். அவற்றோடு பத்தியமும்   மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவு முறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.


வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும். அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளிளை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

 காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டையும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற்கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக்கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.


முன் சொன்னவாறு பொதுவாக வாதநோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் உடற்பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயலவேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை) மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.



நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ளவேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

 இதன் தொடர்ச்சியை நாம் நாளை பாப்போம்.




No comments:

Post a Comment